திருச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியையிடம் ரூ.1500 லஞ்சம் வாங்கிய பெண் வட்டார கல்வி அலுவலர் கைது .
திருச்சி, வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் (திருச்சி நகரம்) பணிபுரியும் வட்டார கல்வி அலுவலர் கையூட்டு(லஞ்சம்) பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார் .
திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் லதா பேபி கூடுதல் பொறுப்பாக வையம்பட்டி வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது கட்டுப்பாட்டின் கீழ் ஏற்கனவே திருச்சி, மணப்பாறையைச் சேர்ந்த விமலா என்ற பள்ளி ஆசிரியை பணிபுரிந்துள்ளார். தற்போது பணிமாறுதலில் வேறு பள்ளிக்கு கடந்த ஜூலை மாதம் சென்றுவிட்டார். ஜூலை மாதத்தில் மேற்படி பள்ளி ஆசிரியை 4 நாட்கள் பணிபுரிந்தைமக்காக ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்துள்ளது. மேற்படி பள்ளி ஆசிரியை அந்த 4 நாட்களுக்கான ஊதியத்தை தற்போது பெறும் பொருட்டு, 4 நாட்கள் ஊதியம் கொடுக்கப்படவில்லை என்பதற்கு சான்று கேட்டு, மேற்படி வையம்பட்டி வட்டார கல்வி அலுவலர் லதா பேபியை சந்தித்தபோது, கொடுபடா சான்று வழங்க ரூ.1,500/- லஞ்சம் கேட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக 15.12.2025ந் தேதி ஆசிரியை விமலா திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இன்று திங்கள் கிழமை 15.12.2025ந் தேதி துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்ன வெங்கடேஷ், சேவியர்ராணி மற்றும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொறிவைப்பு நடவடிக்கையின் போது வட்டார கல்வி அலுவலர் லதா பேபி லஞ்சப்பணம் ரூ.1,500/-ஐ விமலாவிடமிருந்து திருச்சி நகர வட்டார கல்வி அலுவலர் அலுவலகத்தில் கேட்டு பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.

இது தொடர்பாக திருச்சி நகர, வட்டார சுல்வி அலுவலர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

