மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு இணங்க வற்புறுத்திய அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி தமிழ் பேராசிரியர் சஸ்பெண்ட் .
முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவியிடம் வரம்பு மீறி பேசிய பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது.

தமிழ் துறையில் பேராசிரியராக நாகராஜன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயதான மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரிடம் பேராசிரியர் நாகராஜன் தனது ஆசைக்கு இணங்குமாறும், தான் மாணவியை விரும்புவதாகவும், ஆசைவார்த்தை கூறியும் பேசியுள்ளார். பேராசிரியர் நாகராஜன் மாணவியிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இதுகுறித்த தகவல் அறிந்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் கணேசன் மற்றும் கல்லூரி புகார் உள் விசாரணை கமிட்டி பேராசிரியரிடம் விசாரணை செய்தது. பேராசிரியர் கமிட்டி விசாரணையில் தான் செய்த செயலுக்கு வருத்தம் தெரிவித்த நிலையில் கல்லூரி முதல்வர் உயர் அதிகாரிகளுக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணைஇயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்சி சமூக நலத்துறை அதிகாரிகள் நேரில் கல்லூரிக்கு வருகை தந்து மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், தமிழ்துறை தலைவர் மஞ்சுளா மற்றும் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் நாகராஜன் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் நாகராஜன் மீது இதற்கு முன்பு இருமுறையும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக கல்லூரி வட்டாரத்தில் தகவல்கள் பேசப்படுகிறது. தமிழ் பேராசிரியர் மாற்றுத்திறனாளி மாணவியிடம் தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்த மூளை சலவை செய்யும் விதமாக பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
வேலியே பயிரை மேய்ந்த கதையாக பேராசிரியர் தன்னிடம் படிக்கும் மாணவியிடம் தகாத எண்ணத்துடன் பேசிய நிகழ்வு கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயர் அதிகாரி விசாரணையின் போது கல்லூரியின் முதல்வர் கணேசன், மூத்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி உள் விசாரணை கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர் நாகராஜ் சஸ்பெண் செய்யப்பட்டுள்ளார்.

