திருச்சி மத்திய சிறையில் கைதி தாக்கப்பட்ட விவகாரம்
சிறைத்துறை அதிகாரி உள்பட 23 பேர் மீது வழக்கு பதிவு
ஏழு பிரிவுகளின் கீழ் நடவடிக்கை.
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதியாக உள்ளவர் மதுரையை சேர்ந்த ஹரிஹரசுதன். இவர் மதுரை சிறையில் 10 ம் வகுப்பு முடித்து விட்டு சிறையில் ஐ.டி.ஐ படிக்க விருப்பப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஹரிஹரசுதன்
கடந்தாண்டு அக்டோபர் மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கடந்த மாதம் ஹரிஹரசுதனை சிறை துணை அலுவலர்(துணை ஜெயிலர்) உள்ளிட்டோர் தாக்கி உள்ளனர். அதனை தொடர்ந்து ஹரிஹரசுதனை சந்திக்க வந்த அவருடைய பெற்றோருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஹரிஹரசுதனின் தாய் இது குறித்து ஆட்கொணர்வு மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார். அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சிறை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி ஹரிஹரசுதனை தாக்கியதாக திருச்சி மத்திய சிறை துணை சிறை அலுவலர் மணிகண்டன் தலைமை காவலர் அருண்குமார், பெயர் தெரியாத ஒருவர் மற்றும் 20 சிறை காவலர்கள் மீது சட்ட விரோதமாக அடைத்து வைத்தல், காயம் ஏற்படுத்துதல், உடல் ரீதியாக காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் மீது கே கே நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம குறித்து கே.கே.நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.