திருச்சி: சொத்தை எழுதி வாங்கிட்டு சாப்பாடு கூட தராத ஆத்திரத்தில் மகனை வெட்டி கொன்ற 78 வயது தாத்தா. நள்ளிரவில் நடந்த பயங்கரம்.
திருச்சி மாவட்டம் கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு 78 வயது ஆகிறது. இவருக்கு அண்ணாதுரை (வயது 55), சின்னசாமி (வயது 52) என்ற 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.
சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்டு அண்ணாதுரை சின்ன சாமியும் தந்தையை சரியாக பராமரிக்காமல் இருந்துள்ளனர்.
மேலும் அவர் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் இருவரும் வாங்கிக் கொண்டனர். தாயை மட்டும் கவனித்துக் கொள்ளும் மகன்கள் தந்தைக்கு சரியாக சாப்பாடு கூட கொடுக்கவில்லை.

இதனால் கந்தசாமி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர்கள் அறிவுறுத்தியும் இரண்டு மகன்களும் சரியாக சாப்பாடு கொடுக்கவில்லை. கடந்த வாரம் ஊர் திருவிழாவின்போது மகன்கள் குடும்பத்துடன் ஆடு வெட்டி சமைத்து சாப்பிட்ட போது கந்தசாமிக்கு சாப்பாடு கூட கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது .
இதனை நினைத்து மன உளைச்சலில் இருந்த கந்தசாமி நேற்று நள்ளிரவு தூங்கிக் கொண்டிருந்த தனது மூத்த மகன் அண்ணாதுரயை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அண்ணாதுரையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.