திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் தௌபிக் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஒரு டீக்கடையில் டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
அந்தக் கடையில் டீ குடிக்க வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெத்ரோ என்கிற ஷியாமுக்கும் (வயது: 24), தெளபிக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, தெளபிக்கிடம், தன்னை காவல்துறையில் பணியாற்றும் காவலர் என கூறி அறிமுகமான ஜெத்ரோ, அவருடன் பழகி வந்திருக்கிறார்.
ஜெத்ரோ
இந்த நிலையில், காவல்துறையில் ஏலம் விடும் வாகனங்களைக் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்துத் தருவதாகக் கூறி ஜெத்ரோ, தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளார்.

ஆனால், வாக்குறுதி கொடுத்தபடி வாகனங்களை ஏலம் எடுத்துத் தராமலும், பணத்தைத் திருப்பி கேட்டால் பணத்தையும் தராமலும் ஏமாற்றி வந்துள்ளார்.
இது குறித்து, தெளபிக் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்து வந்த நிலையில், ஜித்ரோ திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகே உள்ள ஜே.ஜே நகர்ப் பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது.
அப்படிக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்குச் சென்று அவரை அழைத்து விசாரணை செய்ததில் அவர் காவல்துறையில் பணியாற்றுகிறேன் எனக் கூறி ஏமாற்றியதும், தெளபிக்கிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, ஜெத்ரோவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
காவல்துறையில் பணியாற்றுவதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் ரூ. 1 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த நபரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.