சிறப்புமிக்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது .
The special Srirangam Renganathar Chithira Therottam was held today.
ரங்கா ரங்கா என கோஷம் முழங்க
ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கோவிந்தா. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுவதும்,
108 வைணவத்தலங்களில் முதன்மையானதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர் திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.
இவ்வகையில் இந்த ஆண்டிற்கான சித்திரை தேர் திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 21-ந்தேதி தங்க கருட வாகனத்திலும், நேற்று முன்தினம் காலை வெள்ளிக்குதிரை வாகனத்திலும் வீதி உலா வந்தார். மாலை நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, சித்திரைத்தேர் அருகில் வையாளி கண்டருளினார்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 5 மணியளவில் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காலை 5.30 மணியளவில் சித்திரைத் தேர் ஆஸ்தான மண்டபம் வந்து சேர்ந்தார். இதையடுத்து காலை 5.45 மணிக்கு மேஷ லக்னத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6.30 மணிக்கு திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
கீழச்சித்திரை வீதியிலிருந்து புறப்பட்ட தேர் தெற்குசித்திரை வீதி, மேற்கு சித்திரை வீதி மற்றும் வடக்கு சித்திரைவீதிகளில் வலம் வந்தார். தேரின் முன் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், நெய் விளக்கு, சூடம் ஏற்றி ரங்கநாதரை வழிப்பட்டனர்.
நாளை (28-ந்தேதி) இரவு ஆளும்பல்லக்குடன் தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் , இணை ஆணையர் சிவராம்குமார், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.
பக்தர்கள் பாதுகாப்பிற்காக சுமார் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர் .