முசிறி அருகே தூங்கி கொண்டிருந்த விவசாயி வெட்டி கொன்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்.
இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோபிநாத் (வயது 26) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை. மகள் கெளசி சென்னையில் படித்து வருகிறார். கோபிநாத் டிப்ளமோ படித்து விட்டு தோட்டத்தில் விவசாய வேலை செய்து வந்துள்ளார்.
இவர்களுக்கு சொந்தமான வீடு நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தாலுகா, அம்பாயிபாளையம் கிராமத்தில் உள்ளது. பாலசுப்ரமணியம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் செல்வியும், கோபிநாத்தும் தோட்டத்தில் உள்ள குடிசை வீட்டில் தங்கி விவசாயம் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில்

மகன் கோபிநாத் வேலம்பட்டி கிராமத்தில் வயலில் உள்ள வீட்டின் முன்பு வாசலில் நேற்று இரவு படுத்து உறங்கி உள்ளார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக அவரது தாயார் செல்வி வெளியே வந்து பார்த்தபோது கட்டிலில் தனது மகன் கோபிநாத் எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அலறி அடித்து சத்தம் போட்டு உள்ளார். இதைஅடுத்து அருகில் இருப்பவர்கள் ஓடி வந்து தண்ணீர் ஊற்றி நெருப்பை அணைத்துள்ளனர். இருந்த போதிலும் கோபிநாத் உடல் முழுவதும் எரிந்து சம்பவ இடத்திலேயே கரிக்கட்டையாக பலியானார் .
இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சப் இன்ஸ்பெக்டர் முத்துசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எரிந்து போன நிலையில் கிடந்த கோபிநாத் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
திருச்சியில் இருந்து வந்த மோப்ப நாய் லீலா மற்றும் தடயவியல் நிபுணர் சிவசுப்பிரமணியன், கைரேகை நிபுணர் திருலோக சுந்தர் ஆகியோர் கொண்ட குழுவினர் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்துள்ளனர்.
வாசலில் படுத்து உறங்கிய வாலிபர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகநாத்தினம் தலைமையில் மூன்று தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.