திருச்சி கொள்ளிடம் பாலம் அருகே அடையாளத் தெரியாத வாகனம் மோதி தாய் மகள் சம்பவ இடத்திலேயே பலி. தந்தை மகன் கவலைக்கிடம்.
திருச்சி அருகே நேற்று முன் தினம் இரவு நடைபெற்ற சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்தனா். தந்தை, மகன் படுகாயமடைந்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி கோவண்டக்குறிச்சி பெருமாள் கோயில் தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆண்ட்ரூ ஸ்டாலின் (வயது 41). இவா் தனது மனைவி சத்யா (வயது 39), மகள் பெரியநாயகி (வயது 11) மகன் ரெமிஜியாஸ் (வயது 6) ஆகியோருடன் வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் திருச்சி- சென்னை புறவழிச் சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

கொள்ளிடம் பாலம் சோதனைச்சாவடி அருகே வரும்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 4 பேரும் கீழே விழுந்தனா். அப்போது விபத்தை ஏற்படுத்திய வாகனம் சத்யா மற்றும் அவரது மகள் மீது ஏறிச் சென்றதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
தந்தை, மகன் இருவரும் பலத்தக் காயமடைந்தனா்.
அருகில் இருந்த பொதுமக்கள் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இந்த விபத்து குறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.