Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தை ஏற்படுத்தும் சிகப்பு காது ஆமைகளை கடத்தி வந்த நபர் திருச்சி விமான நிலையத்தில் கைது.

0

'- Advertisement -

 

மலேசியாவில் இருந்து சாக்லேட் பெட்டிகளில் அடைத்து கடத்தி வரப்பட்ட 2,447 சிவப்பு காது ஆமைகளை திருச்சி விமான நிலைய அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்துள்ளனர் .

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அன்றாடம் நூற்றுக்கணக்கான விமானங்கள் வந்து செல்கின்றன. வெளிநாடுகளில் இருந்து வந்து செல்லும் விமானங்களில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை சட்டவிரோதமாக கடத்தி வருவதை விமான பயணிகள் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். இதனை தடுக்க, பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்று மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பேட்டிக் ஏர் விமானத்தின் மூலம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவர், சாக்லேட் பெட்டிகளைப் போன்ற அட்டைப் பெட்டிகளில் 2,447 சிவப்பு காது ஆமைக்குஞ்சுகளை அட்டைப்பெட்டியில் வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அந்த பயணியை ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவப்பு காது ஆமைகளை இந்தியாவிற்குள் கொண்டு வர ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வகை ஆமைகளால் ஏற்படக்கூடிய ஆபத்து தெரியாமல் பலரும், செல்லப் பிராணிகளாக வளர்க்க விரும்பி, அதை விலை கொடுத்து வாங்குகின்றனர்.

இந்த வகை ஆமைகள் சிறியதாக இருந்தாலும், அதிவேகமாக வளரக் கூடியவை. இது அளவில் பெரிதாகி விட்டால், வீட்டில் வளர்க்க முடியாமல் பெரும்பாலானோர் அக்கம் பக்கத்தில் இருக்கும் நீர்நிலைகளில் கொண்டு சென்று விட்டு விடுகின்றனர்.

அங்கு சிவப்பு காது ஆமைகள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்து, இந்திய ஆமைகளின் வாழ்விடம், உணவு ஆகியவற்றை அபகரிக்கின்றன. பல வகையான தவளைகள், மீன்களையும் கபளீகரம் செய்கின்றன. அதனால் இந்த வகை ஆமை, இந்திய சுற்றுச்சூழலுக்கே ஆபத்தாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.