விராலிமலையில் தைப்பூச திருவிழாவையொட்டி தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விராலிமலையில் பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு வருடம்தோரும் தைப்பூசத்தையொட்டி மலைமேல் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு அன்றிலிருந்து 10நாட்களுக்கு தினமும் சுவாமி திருவீதி உலா நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் தைப்பூசத்தையொட்டி கடந்த 16ம் தேதியன்று சுவாமிக்கு முன்பு உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் தீபாராதனை காட்டி கொடி ஏற்றி வைத்து காப்பு கட்டப்பட்டது. அன்று முதல் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் கேடயம், மயில், பூதம், சிம்மம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதனையடுத்து நேற்று மலையடிவாரத்தில் உள்ள திருத்தேருக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்து பின்னர் முகூர்த்தகாலுக்கு புனித நீர் ஊற்றி முகூர்த்தக்கால் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தேர் அலங்காரம் செய்யும் பணியானது தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வரும் 24ம்தேதி சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் தேர் வடம் பிடிக்கப்பட்டு 4ரத வீதிகளில் வலம் வந்து நிலையை அடைகிறது. அதனை தொடர்ந்து 25ம்தேதி இரவு தெற்கு தெருவில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கிறது. 6ம்தேதி விடையாற்றியுடன் விழாவானது நிறைவடைகிறது.
இந்நிகழ்ச்சியில் பூபாலன், ஜனனி ராமச்சந்திரன், முருகேசன், ரெங்கராஜ் உள்பட பக்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.