திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட காஜாமலை பகுதியில் ஏசிஎல் என்ற சாஃப்ட்வேர் நிறுவனத்தை கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் நடத்தி வந்துள்ளனர்.
அவர்கள் கடந்த 2012 ம் ஆண்டு காஜமலையில் உள்ள சொத்தினை அடமானம் வைத்து கனரா வங்கியில் கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அதற்கான அசல் மற்றும் வட்டியை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர்.
பலமுறை வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பியும் கடன் தொகையை திரும்ப செலுத்தாததால் காஜாமலை பகுதியில் உள்ள கார்த்திக் வீட்டிற்கு மண்டல துணை வட்டாட்சியர் பிரேம்குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றுள்ளனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது அங்கு வந்த கார்த்திக் மற்றும் அடையாளம் தெரியாத 20க்கும் மேற்பட்ட குண்டர்கள் சரமாரியாக அவர்களை தாக்கி உள்ளனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த மண்டல துணை வட்டாட்சியர் பிரேம் குமார் மற்றும் கனரா வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திருச்சி மேற்கு வட்டாட்சியர் ராஜவேல் மற்றும் கனரா வங்கி மேலாளர் ஆகியோர் கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் துணை வட்டாட்சியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தும் அவரை தாக்கிய முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்கத்தினர், பணி புறக்கணித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து கடந்த வாரம் 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். துணை வட்டாட்சியரை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வருவாய் துறையினருக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் என தான் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பணி புறக்கணிப்பு போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் 750 வருவாத்துறையினர் பங்கேற்றனர். இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது “வருவாய் துறையினர் ஜப்தி நடவடிக்கைகள் செல்லும் போது காவல்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள், அதேபோல காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் போலீசார் வருவதற்கு முன்பாகவே தாக்குதல் சம்பவம் நடைபெற்று உள்ளது. குறிப்பாக இந்த தாக்குதல் சம்பவத்திற்கு திமுக கவுன்சிலர் காஜாமலை விஜய் தான் காரணம், அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பொய்யான நபர்களை கைது செய்யாமல், உண்மையான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி நேற்று (25-ந் தேதி) முதல் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவித்த நிலையில் திடீரென வாபஸ் பெறப்பட்டது.
துணை தாசில்தாரை தாக்கியதாக கொட்டப்பட்டு பகுதியை சேர்ந்த தேவஆசீர்வாதம், காஜாமலையை சேர்ந்த சுப்பிரமணி, ரெங்கநாதன் உள்ளிட்டோரை ஏற்கனவே கைதுசெய்து இருந்த நிலையில், இரண்டு நாட்கள் முன் காஜாமலை பகுதியை சேர்ந்த அசன், சையத்ஜாகீர்உசேன், ஷேக்மொய்தீன், காட்டூரை சேர்ந்த முத்துப்பாண்டி, மாடசாமி ஆகிய 8 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சி மாவட்ட பாஜக தலைவர் ராஜசேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வாயில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது போராட்டத்திற்கு அனுமதி இல்லை என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் பாஜக நிர்வாகிகளுக்கும், காவல்துறைக்கு வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு 30 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு போராட்டம் நடத்தாமல் பாஜவினர் கலைந்து சென்றனர்.
இதனால் கலெக்டர் அலுவலகம் அருகே சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.