திருச்சி அருகே இன்று அதிகாலை அரசினர் தொழிற்பயிற்சி பள்ளி மாணவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். உடலை கைப்பற்றி ஜீயபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று அதிகாலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னன். இவரது மகன் கோகுல். இவர் திருச்சி அரசினர் தொழிற்பயிற்சி பள்ளியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்நிலையில் கோகுல் கொடியாலத்தில் உள்ள அவரது வீட்டு வாசலில் கழுத்துப் பகுதியில் வெட்டுப்பட்டு இன்று அதிகாலையில் இறந்து கிடந்துள்ளார்.
மாணவன் பிணமாக கிடந்ததை அருகில் உள்ளவர்கள் பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த ஜீயபுரம் ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் டி.எஸ்.பி,மற்றும் போலீசார் மாணவனின் கொலைக்கு காரணம் காதல் விவகாரமா? அல்லது ஏதேனும் முன் விரோதமா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.