பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்த திட்டம் தொடர்பாக நாளை முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிரந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார். பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் இன்னும் நடைமுறைக்கு வராமல் இருந்தது. கடந்த பட்ஜெட்டில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரவில்லை. பொருளாதார ரீதியாக அரசுக்கு இருக்கும் சில சிக்கலால் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. திமுகவின் இந்த தேர்தல் வாக்குறுதி பல்வேறு காரணங்களுக்காக இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.
இந்த திட்டம் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், திராவிட ஆட்சி சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது என்பதை என்னால் தலை நிமிர்ந்து சொல்ல முடியும். கட்டணம் இல்லா பேருந்து பயணம் மூலம் 265 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் உரிமை தொகையை செப்டம்பர் மாதத்தில் இருந்து தர இருக்கிறோம். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் மூலம் 1 கோடி மகளிர் மாதம் முழுக்க 1000 ரூபாய் பெற உள்ளனர்.
இது இல்லாமல் நான் கலந்து கொண்ட பல கூட்டங்களில் முக்கிய பல உதவிகளை செய்து அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது, 63 ஆயிரம் கோடியாக இருந்த வருவாய் பற்றுக்குறையை தற்போது 30 ஆயிரம் கோடியாக குறைத்து உள்ளோம்.
தமிழ்நாட்டை நோக்கி 2 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீடுகளை ஈர்த்து உள்ளோம். மாநில உள்நாட்டு உற்பத்தி 6.1 விழுக்காடாக உயர்ந்து உள்ளது. துறை வாரியாக என்னால் சாதனைகளை அடுக்க முடியும். இன்னும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவோம். எங்களுக்கு எதிராக வதந்தி பரப்ப நினைத்தவர்கள் தோல்வி அடைந்து உள்ளனர்.
நாங்கள் தேர்தலை மட்டும் வெல்லவில்லை. மக்கள் மனதையும்தான் சேர்த்து வென்று இருக்கிறோம். நாம் செய்வது ஒரு இனத்தின், கொள்கையின், கோட்பாட்டின் அரசு, என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த உரிமைத் தொகை ஏழ்மையான குடும்பத் தலைவிகளுக்கு மட்டுமே அளிக்கப்படும் என்றும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான லிஸ்ட் எடுக்கும் பணிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளுக்கு மட்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 2.15 கோடி ரேஷன் அட்டை உள்ளது.
இதில் அனைத்திலும் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுப்பது இயலாத காரியம். இதனால் அரசுக்கு பெரிய அளவில் சுமை ஏற்படும். அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்தம் நபர்கள், சொந்த வீடு வைத்து இருப்பவர்கள் ஆகியோருக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வறுமை தொகைக்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்த மேலும் PHH-AYY, PHH, NPHH ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. NPHH -S, NPHH – NS ரேஷன் அட்டைதாரர்களுக்கு இந்த உரிமைத்தொகை அளிக்கப்படாது என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆலோசனை: இந்த திட்டம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் தொடர்சியாக மகளிர் உரிமை தொகை திட்ட அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான பயனாளிகள் இன்னும் முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை. பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
அதை தொடர்ந்து பயனாளிகள் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அறிவிப்பு நாளையே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுக்கும் திட்டத்தில் முக்கியமான விதி ஒன்றை சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 1000 ரூபாய் பெறுவதற்கு குடும்ப தலைவிக்கு குறைந்தபட்ச வயது நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
பெரும்பாலும் 30 வயதுதான் குறைந்தபட்ச வயது. அதற்கு முன் குடும்ப தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 கொடுக்கப்படாது என்று அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அதே சமயம் அதிகபட்ச வயது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. அதிகபட்ச வயது நிர்ணயம் செய்யப்படாமல் 30 வயதை தாண்டிய எல்லா குடும்ப தலைவிக்கும் பணம் கொடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.