திருச்சி ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு திருட்டு
2 வாலிபர்கள் கைது.
திருச்சி ரேஷன் கடையில் பூட்டை உடைத்து பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட இருந்த பச்சரிசி , சீனி திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர் .
திருச்சி பாலக்கரை பகுதியில் அமராவதி ரேஷன் கடை உள்ளது. இங்கு விற்பனையாளராக திருச்சி செந்தண்ணீர்புரத்தைச் சேர்ந்த கணேசன் இவரது மனைவி சரளா (வயது 36) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார் .மறுநாள் வந்து பார்த்தபோது ரேஷன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பாலக்கரை குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பூட்டை உடைத்து திருடியதாக தர்மா என்கிற தர்மராஜ் (வயது 29), தினேஸ்வரன் (வயது 23)ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எடைபோடும் எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது .
இதே போல் திருவரங்கம் சத்திரப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த தீபன் என்பவரது இருசக்கர வாகனத்தை திருடியதாக தர்மா என்கிற தர்மராஜ், விஷ்வா, தினேஸ்வரன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.