தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வலியுறுத்தி ஆசிரியர்கள்
பிரச்சார இயக்கம்.
ஏழை, எளிய கிராமப்புற குழந்தைகளின் கல்வி வாய்ப்பு, 69 சதவீத இட ஒதுக்கீடு, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உயர் கல்வி நிறுவனமாக குறைக்கப்படும் ஆபத்து போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்
தேசிய கல்வி கொள்கை 2020 ஐ திரும்ப பெற வேண்டும்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் ஓய்வு கால வாழ்வாதாரம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் முற்றிலும் பறிக்கப்படும் தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு குடியரசுத்தலைவரிடம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் கையெழுத்து இயக்கம் மற்றும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
பிரச்சார இயக்கத்துக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் நீதிநாயகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி துவக்க உரை ஆற்றினார். தமிழக ஆசிரியர் மன்ற மாநிலத் தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ், கல்வி மாவட்ட செயலாளர் மணிவாசகம், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் தியாகராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
பிரச்சார இயக்கத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முடிவில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயற்குழு உறுப்பினர் சிற்றரசு நன்றி கூறினார்.