வாடிக்கையாளர்கள் பெயரில்
திருச்சி வங்கியில்
ரூ 87.50 லட்சம் மோசடி
வங்கி மேலாளர் கைது
திருச்சி நவ 23 –

திருச்சி வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலி ஆவணங்கள் கொடுத்து ரூ. 87.50 லட்சம் பணம் மோசடி செய்ததாக வங்கி மேலாளர் கைது.
இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
அரசுடமையாக்கப்பட்ட திருச்சி வங்கியின் மண்டல மேலாளர் ஸ்ரீமதி திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் இன்ஸ்பெக்டர் கோசலைராமனிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆறுமுகநேரி பகுதியைச் சேர்ந்தவர் சண்முகராஜா. இவர் திருச்சி மலைக்கோட்டை கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். தற்சமயம் மேல சிந்தாமணி காவேரி நகரில் வசித்து வருகிறார். இவர் மலைக்கோட்டை கிளை வங்கியில் வாடிக்கையாளர்கள் பெயரில் போலியான ஆவணங்களை வங்கியில் கொடுத்து பணம் மற்றும் தங்க நகை கடன் ஆகியவை மூலமாக ரூ 87.50 லட்சம் மோசடி செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கோசலை ராமன் வங்கி மேலாளர் சண்முகராஜா மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். பின்னர் வங்கி மேலாளர் சண்முகராஜா கைது செய்யப்பட்டார்.