ஆன்லைன் வர்த்தக மூலம்
அதிக லாபம் ஈட்டி தருவதாக பெண்ணிடம் ரூ. 9 லட்சம் மோசடி
3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு.
திருச்சி உறையூர் மேட்டு தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 51).இந்த தம்பதியரின் மகன் தினேஷ். இவர் துபாயில் பணியாற்றி வந்தார். அப்போது அவருடன் புதுக்கோட்டையைச் சேர்ந்த அரவிந்த் குமார் என்ற வாலிபரும் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் அந்த வாலிபர் தினேஷின் தாயார் தமிழ்செல்வி இடம் ஆன்லைன் வர்த்தகத்தில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்தப் பெண்மணி அரவிந்த் குமார் கூறிய திருநெல்வேலியைச் சேர்ந்த இஸ்மாயில் என்பவரது வங்கி கணக்கில் ரூ. 7 லட்சம் செலுத்தியுள்ளார். அதன் பின்னர் அரவிந்த் குமார் தாயாரிடம் நேரில் ரூ. 2 லட்சம் செலுத்தினார். ஆனால் அந்த பணத்தை அவர்கள் திருப்பி தராமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வி பலமுறை அவர்களிடம் பணத்தை திருப்பி கேட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதைத்தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் மனு அளித்ததன் பேரில் நீதிமன்ற உத்தரவின் படி தில்லை நகர் போலீசார் இஸ்மாயில், அரவிந்த் குமார், அவரது தாயார் ஷோபனா ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து நடத்தி வருகின்றனர்.