செட்டிக்குளம் குபேரன் சன்னிதியில்
தீபாவளி சிறப்பு பூஜை.
திருச்சி அருகே செட்டிக்குளத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வர் கோயில் குபேரன் சன்னிதியில், தீபாவளியை ஒட்டி நடைபெறும் குபேர பூஜை நடைபெற்றது.
இப்பூஜையில் ஏராளமானோர் பங்கேற்று குபேரன் அருள் பெற்றனர்.
ஆண்டுதோறும் தீபாவளி நாளில் குபேரன் மற்றும் லட்சுமி பூஜைகள் நடத்தி வழிபட்டால் செல்வம் பெருகும் என்பது ஐதீகம். எனவே, குபேர மற்றும் லட்சுமி வழிபாடுகள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.
அந்த வகையில் திருச்சியருகே பெரம்பலூர் மாவட்டத்தில் செட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள குபேரன் சன்னிதியில் நடைபெறும் தீபாவளி குபேர சிறப்பு பூஜையும் பிரபலமாகி வருகின்றது.
கொரோனா தொற்று காலம் என்பதை கருத்தில் கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி நாளில் நடைபெற்ற குபேர பூஜைகள் குறைவான நபர்கள் பங்கேற்கும் விதமாகவே நடைபெற்றது.
நிகழாண்டு நடைபெற்ற சிறப்பு பூசையில் குபேரர்-சித்ரலேகாவுக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் நாணயங்கள், பொன் பொருட்களைக் கொண்டும் குபேரருக்கு சிறப்பு அர்சனைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, திருச்சியைச் சேர்ந்த ஆடிட்டரும் வழக்குரைஞருமான ஆறுமுகம் தலைமையில் பொறியாளர் ராமலிங்கம்,செட்டிக்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
பூசிக்கப்பட்ட நாணயங்கள் இலவச விநியோகம் :
இக்கோயிலில் குபேர பூஜையில் வைத்து பூசிக்கப்படும் பணத்தாள்கள், நாணயங்கள், நகைகளை வீட்டில் வைத்து குபேர மற்றும் லட்சுமி பூஜைகளை செய்து வந்தால், கஷ்டங்கள் நீங்கி, லட்சுமி கடாட்ஷம் பெருகும். இதனை கருத்தில் கொண்டு, தரிசனத்துக்கு வரும் அனைவருக்கும் பூஜிக்கப்பட்ட நாணயங்கள் உபயயதாரர்கள் மற்றும் பக்தர்களால் ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது