திருச்சி சிந்தாமணி பகுதியில் உள்ள காவிரி பாலத்தில், நேற்று இரவு 12 மணியுடன் வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருச்சி மலைக்கோட்டை அருகே சிந்தாமணி மற்றும் திருவானைக்கா இடையே காவிரியாற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பாலம் திருச்சி மாநகரின் பிரதான போக்குவரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தப் பாலம் பழுதடைந்தை அடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக பழுது நீக்கம் செய்யப்பட்டது.
என்றாலும் பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு மீண்டும் பாலம் பழுதடைந்தது.

இதனால் பாலத்தை சீராக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் அந்தப் பாலம்,நவீன முறையில் சீரமைக்கப்பட உள்ளதாகவும், அதனால் பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தவுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி நேற்று சனிக்கிழமை நள்ளிரவு 12 மணியுடன் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மாற்று போக்குவரத்து குறித்து ஏற்கனவே மாவட்ட நிர்வாகம், காவல்துறை ஆலோசனையின் பேரில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாலத்தில் பணிகள் தொடங்கும் வரை இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் சென்று வரும் வகையில் பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது தீபாவளி நெருங்கி வரும் வேளையில் திருச்சி மாநகருக்கு வரும் முக்கிய பாதை தடை செய்யப்பட்டுள்ளதால் ஆட்டோ, கார் போன்றவற்றில் மாநகருக்கு வரும் பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.தீபாவளி முடிந்தவுடன் பாலத்தின் வேலை ஆரம்பித்து இருக்கலாம் எனக் கூறுகின்றனர்.