திருச்சியில்
கள்ளக்காதலியை கத்தியால் குத்தி கொன்ற வங்கி ஊழியர் இரயில் முன் பாய்ந்து தற்கொலை.
திருச்சியில் இன்று காலை நடந்த இந்த பயங்கர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மேலகல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி புவனேஸ்வரி (வயது 31). இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 6 வயதில் லோகேஷ் என்ற மகன் உள்ளார். அதே பகுதி மேல கல்கண்டார் கோட்டை பழைய அய்யனார் தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் வினோத்குமார் (வயது 36 ),தனியார் வங்கி ஊழியர். வினோத்குமாருக்கும், புவனேஸ்வரிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது . இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து மகிழ்ச்சியாக இருந்து வந்துள்ளனர்.
‘. இந்நிலையில் இன்று காலை புவனேஸ்வரியின் வீட்டிற்கு வங்கி ஊழியர் வினோத்குமார் சென்றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது .இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் புவனேஸ்வரியை கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் துடி,துடித்த புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
அங்கிருந்து தப்பி ஓடிய வினோத்குமார் பழைய மஞ்சள் திடல் பகுதி ரயில் நிலையம் அருகே சென்று தஞ்சையில் இருந்து திருச்சிக்கு ரயில்வே ஊழியர்கள், பணியாளர்களை ஏற்றி வந்த ரயில் முன் பாய்ந்தார். இதில் உடல் துண்டாகி வினோத்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்றனர்.பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்மலை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவ இடத்தை துணை கமிஷனர் ஸ்ரீதேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .மேலும் மோப்பநாய் பொன்னியுடன் காவல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சியில் இன்று அதிகாலையில் கள்ளக்காதலியை வங்கி ஊழியர் கத்தியால் குத்தி கொலைசெய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.