ஆன்லைன் மோசடி கும்பலிடம்
ரூ.15 லட்சம் பணத்தை இழந்த ஓய்வு பெற்ற ரயில்வே பெண் ஊழியர்.
சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிகரித்துள்ளன. வெளிநாடுகளில் வேலை பெற்றுத்தருவதாக நேர்முகத்தேர்வு நடத்தி இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களிடம் பல லட்சம் மோசடி நடந்து வருகிறது.
துவாகுடியைச் சேர்ந்த சாப்ட்வேர் பெண் இன்ஜினியர் போலி திருமண தகவல் மையம் மூலம் நைஜீரியா வாலிபரிடம் ரூ. 8 லட்சத்தை பறிகொடுத்து விட்டு தவித்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண்மணி உடனடியாக திருச்சி புறநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இதை எடுத்து இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் மோசடி பேர்வழி யின் வங்கி கணக்கை முடக்கி விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளார்.
ஆனால் இன்னொரு பெண்மணி கு.15 லட்சம் பணத்தை இழந்து விட்டு முறையாக புகார் அளிக்காமல் இருப்பதாக சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேதனை தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும்போது:-
திருச்சி பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற ரயில்வே பெண் அலுவலர் ஒருவர் முகநூல் மூலம் மோசடி பேர்வழி ஒருவரிடம் சிக்கினார். அந்த நபர் அமெரிக்காவில் டாக்டராக இருப்பதாகவும், கோடிக்கணக்கில் சம்பாதித்து விட்டதாகவும், தங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலை உயர்ந்த பரிசுப் பொருள் ஒன்றை அமெரிக்காவில் இருந்து அனுப்பியதாக கூறி வரி, சுங்கத் துறை அனுமதி, ரிசர்வ் வங்கி அனுமதி என சில லட்சங்களை தனது வங்கி கணக்குக்கு பெற்று அந்த பெண்மணியை ஏமாற்றினார்.
ஆனால் பொருள் கிடைக்கவில்லை என்று அந்த நபரை தொடர்பு கொண்டபோது சுங்கத்துறை அதிகாரிகள் பொருளை எடுத்துக்கொண்டு ஏமாற்றி இருக்கலாம் என கூறினார். இதனையும் அந்தப் பெண்மணி வேதவாக்காக நம்பி மீண்டும் மீண்டும் மோசடி பேர்வழி வங்கிக் கணக்கில் ரூ 15 லட்சம் வரை அனுப்பி ஏமாந்து உள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு புகார் அளிக்க வந்தவர் எழுத்துப்பூர்வமான புகார் கொடுக்காமல் சென்று விட்டார். பின்னர் மீண்டும் ஒரு நாள் வந்த அவர் ஏமாற்றிய பேர்வழி தனது நண்பர் என்றும், அவர் பொருள் அனுப்பியது உண்மை, சுங்கத்துறை அதிகாரிகள் தான் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் கூறிவிட்டு சென்றார். இன்றளவும் பணத்தை இழந்ததை அவர் உணரவில்லை. பத்து மாதங்களுக்கு மேலாக இந்த மோசடி அரங்கேறி வந்துள்ளது. ஆன்லைன் மோசடியை பொருத்தமட்டில் உடனடியாக புகார் அளித்தால் மட்டுமே வங்கி கணக்கு சென்ற பணத்தை முடக்கி நடவடிக்கை எடுக்க இயலும். நாள் கணக்கில், மாதக்கணக்கில் புகார் அளிக்க தயங்கினால் காவல்துறையால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.