15-வது உட்கட்சித் தேர்தல்.
திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 ஆக அதிகரிப்பு.
21 பதவிகளுக்கு போட்டி போட்டு மனு.
திமுக 15-வது உட்கட்சி தேர்தலையொட்டி திருச்சி தி.மு.க.வில் 65 வார்டுகள் 130 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான உட்கட்சி தேர்தல் மனு வாங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிர்வாகிகள் போட்டி போட்டு மனு கொடுத்தனர்.
திருச்சி மத்திய மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சி மேற்கு, திருவரங்கம் தொகுதிகளை உள்ளடக்கிய காஜாமலை, கிராப்பட்டி, உறையூர், தில்லைநகர், திருவரங்கம் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி வார்டுகள் 29 உள்ளன. தற்போது தி.மு.க.வில் 29 வார்டுகள் 58 வார்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொரு வார்டும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. 65 வார்டுகளில் 93 வார்டுகளாக மாற்றி அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. உட்கட்சித் தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து வார்டுகளும் இரண்டாக பிரித்து இரட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் 65 வார்டுகள் 130 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் 5 பகுதிகளை உள்ளடக்கிய 58 வார்டுகளுக்கு வட்டச் செயலாளர் மற்றும் பிரதிநிதிகள், துணைச் செயலாளர், இணைச்செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 21 பதவிகளுக்கு மனு வாங்கும் நிகழ்ச்சி இன்று திருச்சி தில்லைநகரில் உள்ள தி.மு.க. முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் நடந்தது.
மனுக்களை திருச்சி மாநகராட்சி மேயரும் மாநகர தி.மு.க. செயலாளருமான அன்பழகன், மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் வைரமணி மற்றும் மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் பி.டி.சி. செல்வராஜ் தேர்தல் ஆணையராக பொறுப்பேற்று மனுக்களை வாங்கினர்.
நிர்வாகிகள் போட்டி போட்டு ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை வழங்கினார். இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் மனு தாக்கல் செய்தால் தேர்தல் நடத்தப்படும். அதன் பின்னர் பட்டியல் தயார் செய்து நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.
வார்டு அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவதால் ஏராளமான நிர்வாகிகள் ஆர்வத்துடன் வந்து மனு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.