தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதில் முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 105.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்களை குவித்தது.
இதையடுத்து, முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 62.3 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதன் மூலம் 130 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 62.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், தென் ஆப்பிரிகாவை விட 304 ரன்கள் முன்னிலை பெற்றது.
இதையடுத்து, 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கி தொடங்கியது.
இந்நிலையில், நேற்றைய 4-ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்து இருந்தது. அந்த அணியின் கேப்டன் எல்கர் 52 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் இன்று இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
வெற்றிபெற மேலும் 211 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி களமிறங்கியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பவுமா இந்திய பந்து வீச்சாளர்களுக்கு கடும் சவால் அளித்தார்.
சிறப்பாக விளையாடிய டீன் எல்கர் 77 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதன் பிறகு களமிறங்கிய டி காக் 21 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய முல்டர் 1 ரன்களில் நடையை கட்ட தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட்களை இழந்தது. உணவு இடைவேளை வரை தென்னாபிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்து இருந்தது.
அந்த அணியின் பவுமா 34 ரன்களுடனும் யான்சென் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளைக்கு பிறகு முகமது சமி பந்துவீச்சில் யான்சென் 13 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த ரபாடா , இங்கிடி அடுத்தடுத்து அஸ்வின் பந்துவீச்சில் ரன் எடுக்காமல் அவுட்டாகினர்.
இதனால் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .அதோடு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
செஞ்சூரியன் மைதானத்தில் இதுவரை ஆசிய அணிகள் வெற்றி பெற்றதில்லை என்பதற்கு முற்றுப்புள்ளி வைத்தது இந்திய அணி.
இப்போட்டியில் ஆட்டநாயகனாக சதம் அடித்த இந்திய வீரர் கேஎல் ராகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
செஞ்சூரியன் மைதானத்தில் வெற்றி பெற்ற முதல் ஆசிய கிரிக்கெட் அணி என்ற சாதனை வெற்றியைப் பெற்றது இந்தியா.
வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.