20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பும் வழங்கப்படும். அமைச்சர் சக்கரபாணி தகவல்.
தமிழகத்தில் 2022-ம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கென 20 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டது.
அதில், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய அனைத்தும் துணிப்பையுடன் சேர்த்து 20 பொருட்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ரூ.1,088 கோடி செலவில் 2 கோடியே 15 லட்சத்து 48 ஆயிரத்து 60 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், அரசு அறிவித்த பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தில் கரும்பு விடுபட்டுள்ளது ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கடலூர் விவசாயிகள் கவலை தெரிவித்தநிலையில்,
பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 20 பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன்
பரிசுத்தொகுப்பில் முழு கரும்பும் இடம்பெற முதல்-அமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
மேலும் குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை பொறுத்து டோக்கன் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் முடிவெடுப்பார்கள் என்றார்.