இந்தியா-நியூசிலாந்து இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.
அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மார்டின் கப்டிலும், டேரில் மிச்சேலும் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
அதிரடியாக விளையாடிய கப்டில் 15 பந்துகளில் 2 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து வெளியேறினார். டேரில் மிச்சேல் நிதானமாக விளையாடி 31 ரன்கள் சேர்த்தார்.
ஆரம்பத்தில் அதிரடி காட்டிய நியூசிலாந்து அணியானது அதிக ரன்கள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசி கட்டத்தில் நியூசிலாந்தை கட்டுப்படுத்தினர். நடுவரிசையில் க்ளென் பிலிப்ஸ் மட்டும் அதிரடி காட்டி 34 ரன்கள் எடுக்க, மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை. இறுதியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் விளையாடிய ஹர்சல் படேல் சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் அரை சதத்தைக் கடந்து அசத்தினர்.
ரோகித் சர்மா 5 சிக்சர்கள் 1 பவுண்டரி விளாசி 36 பந்துகளில் 55 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முன்னதாக கே.எல்.ராகுல் 49 பந்துகளில் 65 ரன்கள் குவித்து கேட்ச் ஆனார்.
பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், சவுதி வீசிய பந்தில் போல்ட் ஆனார்.
18-வது ஓவரில் ரிஷப் பண்ட் தொடர்ந்து 2 சிக்சர்கள் விளாசி ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்.
இறுதியில் இந்திய அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி-20 தொடரில் 2-ல் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வேகப்பந்துவீச்சாளர் ஹார்ஷல் பட்டேல் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.