Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

தூத்துக்குடியில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை.

0

'- Advertisement -

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி திருமலையாபுரத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவருடைய மகன் துரைமுருகன் (வயது 42). பிரபல ரவுடியான இவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.
இதில் 7 கொலை வழக்குகள் அடங்கும்.

கடந்த வாரம் தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் கொலை செய்யப்பட்டு, நெல்லை அருகே டக்கரம்மாள்புரம் காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கில் துரைமுருகனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

துரைமுருகனின் செல்போன் பயன்பாட்டை போலீசார் உன்னிப்பாக கவனித்து வந்தனர். நேற்று மதியம் அவரது செல்போன் சிக்னலை ஆராய்ந்தபோது, தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் இருந்து கோவளம் கடற்கரைக்கு செல்லும் பகுதியில் இருப்பதாக காண்பித்தது.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில், போலீஸ்காரர் டேவிட்ராஜன் உள்பட 4 பேர் கொண்ட தனிப்படையினர் அங்கு விரைந்தனர். அவர்கள் செல்போன் சிக்னல் காண்பித்த இடத்தை நோக்கி தொடர்ந்து சென்றனர்.

அப்போது அங்கு காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட காற்றாலை இருக்கும் இடத்தில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் துரைமுருகன் தனது கூட்டாளிகளான திருச்சியை சேர்ந்த ஆரோக்கியராஜ், தூத்துக்குடியை சேர்ந்த ராஜா ஆகியோருடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

இதனால் போலீசார் அந்த கட்டிடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது அங்கிருந்த துரைமுருகன் உள்ளிட்ட 3 பேரும் தப்பி ஓட முயன்றனர்.

அவர்கள் சிறிது தூரம் ஓடினர். ஆனாலும் போலீசார் விரட்டி சென்று சுற்றி வளைத்ததால், துரைமுருகன் கையில் வைத்திருந்த அரிவாளால் அவர்களை வெட்டுவதற்கு பாய்ந்தார். அப்போது போலீஸ்காரர் டேவிட்ராஜனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

அந்த நேரத்தில் ஆரோக்கியராஜ், ராஜா ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவையும் துரைமுருகன் அரிவாளால் வெட்டினார்.

இதனால் ராஜபிரபு வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை செய்தார். ஆனாலும் துரைமுருகன் அவரை தாக்க முற்பட்டார். இதில் சுதாரித்துக்கொண்ட ராஜபிரபு, துரைமுருகனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து துரைமுருகன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்மண்டல ஐ.ஜி. அன்பு, நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபினபு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அரிவாள் வெட்டில் காயம் அடைந்த போலீசாரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துரைமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். 150-க்கும் மேற்பட்டவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ரவுடி ஒருவரை போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.