போனஸ் வழங்க கோரி
கட்டுமான தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது .
தமிழக அரசு அறிவித்துள்ளபடி நல வாரியங்களில் தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ. 5000த்தை பண்டிகைக்கு முன்பாக அரசாணை வெளியிட்டு அமலாக்க வேண்டும்.
முந்தைய அரசு வழங்கியது போல் பொங்கல் பரிசு தொகுப்பும், இலவச வேட்டி, சேலையும் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கட்டுமான பெண் தொழிலாளருக்கு 55 வயதில் பென்ஷன் வழங்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். திருச்சி மாவட்ட நல வாரிய அலுவலகத்தில் தேங்கியுள்ள அனைத்து விண்ணப்பங்களையும் உடனே பரிசீலனை செய்து உதவிகளை வழங்க வேண்டும். மணல், சிமென்ட், கம்பி, ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வி.ஏ.ஓ சரிபார்ப்பை ரத்து செய்ய வேண்டும். திருச்சி தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் ஓராண்டு காலமாக காலியாக உள்ள ஏசிஎல், டிசிஎல், ஜேசிஎல் பணியிடங்களை நிரப்ப வேண்டும். நலவாரிய அலுவலகத்தில் பணியாளர்களை அதிகமாக நியமித்து காலதாமதம் இன்றி பணிகளை செய்ய வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் நலன்களுக்கு மட்டும் கட்டுமான நல வாரியத்தில் உள்ள அனைத்து நிதிகளையும் பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ திருச்சி மாநகர் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.எஸ்.சேது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட பொருளாளர் உலகநாதன் ஆகியோர் பேசினர். இதில் நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, கல்யாணி, முருகன், வெங்கடேஸ்வரன், குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.