திருச்சி ராம்ஜிநகர் பகுதியில் கஞ்சா புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா ஜ க சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பா ஜ க, மணிகண்டம் தெற்கு ஒன்றிய தலைவர் சிவமூர்த்தி, நேற்று திருச்சி ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பது:
திருச்சி மாவட்டம், ராம்ஜிநகர் பகுதியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் சில சமூக விரோதிகளால், முறைகேடாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனால் இளையோர், தொழிலாளர்களின் நலன் பாதிக்கப்படும் சூழல் ஏற்படுகிறது.
மேலும், இரவு நேரங்களில் இப்பகுதியில் வழிப்பறி, சங்கிலிப்பறிப்பு, பெண்களை கிண்டல் செய்வது உள்ளிட்ட விரும்பத் தகாத, சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் செயல்களும் நடந்து வருகின்றன.
எனவே, இப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் விநியோகத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள், பெண்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கஞ்சா விற்பனையை தடுக்க வலியுறுத்தி பாஜ க சார்பில் ராம்ஜிநகரில் புதன்கிழமை (மே 11 ஆம் தேதி) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என சிவமூர்த்தி தெரிவித்துள்ளார்.