திருச்சி ராம்ஜிநகர் அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் அடுத்துள்ள கள்ளிக்குடி, காந்தி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 63). இவர் தினசரி அதிகாலை அதே பகுதியில் உள்ள தேனீரகத்தில் தேநீர் குடிப்பது வழக்கம்.
அந்தவகையில் நேற்று அதிகாலை அவர் வழக்கமாக செல்லும் கடைக்கு தேநீர் குடிக்கச் சென்றார். கள்ளிக்குடிப் பகுதியில் திருச்சி-திண்டுக்கல் பிரதான சாலையைக் கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக அவ்வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.