திருச்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின்
கோரிக்கைகளை வலியுறுத்தி
அ.தி.மு.க ஆர்பாட்டம்.
திருச்சியில், அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில், போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உரிய நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஒப்பந்தம் மற்றும் ஊக்கத்தொகையை தேர்தல் அறிக்கையில் கூறியவாறு வழங்காத திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
அரசு போக்கு வரத்துக்குழக திருச்சி மண்டல தலைமை அலுவலகத்தின் வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில், மாநகர் மாவட்டச் செயலாளர் வெல்லமண்டி என் . நடராஜன், தெற்கு புறநகர் மாவட்டச் செயலாளர் ப. குமார், வடக்கு புறநகர் மாவட்டச் செயலாளர் மு. பரஞ்சோதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுப் பேசிய போது:-
திமுக தேர்தல் வாக்குறுதிகளில் அளித்தவற்றில் எத்தனை நிறைவேற்றினார்கள் என்பது அனைவரும் அறிவர்.
தொழிற் சங்கத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் இன்னும் வாபஸ் பெறவில்லை.
போக்குவரத்து தொழிலாளர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களையும், மக்களையும் ஏமாற்றி வருகிறது திமுக அரசு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்த திமுக அரசு அதையும் நிறைவேற்றவில்லை. சொத்து வரியை உயர்த்த மாட்டோம் எனக்கூறி அதையும் 150 மடங்கு உயர்த்தியுள்ளனர்.
இதுபோல அறிவித்த வாக்குறுதிகளுக்கு நேர் மாறாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மின் வெட்டு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றனர். எனவே தி மு க அமைச்சர்களை கேரோ செய்யும் காலம் தமிழகத்தில் வெகு சீக்கிரம் வரும்.
நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மட்டுமல்ல இனி வரும் அனைத்து தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தாமரை எஸ். ராஜேந்திரன் (அரியலூர்), ராமச்சந்திரன் (பெரம்பலூர்), திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ராவணன், ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் மாவட்ட பிரதிநிதி அழகர், மாவட்ட கவுன்சிலர் சவரியம்மாள் செல்வராஜ் , ஒன்றிய பொருளாளர் வீரமலை , ஒன்றிய துணைச்செயலாளர் பொன்ராமன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.