Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

0

நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனுக்காக திருச்சி தொழிலதிபரின் மகன் காருடன் கடத்தல்?

திருச்சி தில்லைநகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி (வயது 42). தொழில திபர். நேற்று முன்தினம் இரவு ஹைதர்அலியின் 17 வயது மகன் மற்றும் உறவினரின் மகன் என 2 பேரும் காரில் வெளியே சென்றனர்.

வீடு திரும்பும் போது, பறவைகள் சாலையில் காரை வழிமறித்த 2 பேர் ஹைதர் அலியின் உறவினர் மகனை காரில் இருந்து வெளியேற்றிவிட்டு ஹைதர்அலியின் மகனுடன் காரை எடுத்து
சென்றனர்.

இதில் காரில் இருந்து இறக்கப்பட்ட நபர் மர்ம ஆசாமிகள் 2 பேர் காருடன் மகனை கடத்தி செல்வதாக ஹைதர் அலியிடம் செல்போனில் தகவல் அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹைதர் அலி
கன்டோன்மென்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சேரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில்,
ஹைதர் அலி, தனியார் நிதி நிறுவனத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.6 லட்சம் கடன் பெற்றார். கடன் தொகையில் ரூ.3 லட்சம் செலுத்திய நிலையில் மீதமுள்ள ரூ.3 லட்சம் தொகையை செலுத்தவில்லை. இதையடுத்து நிதிநிறுவனம் சார்பில் பலமுறை பணம் செலுத்த கேட்டும், செலுத்துவதாக கூறிய ஹைதர் அலி, காலம் தாழ்த்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து
பணத்திற்கு பதிலாக காரை எடுத்து செல்வதற்காக ஊழியர்கள் 2 பேர் வந்து காரை எடுத்து சென்ற போது, காரில் இருந்த ஹைதர்அலியின் மகனையும் சேர்த்து அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து இருதரப்பினரையும் வரவழைத்த கன்டோன்மென்ட் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹைதர் அலியின் மகன் நிதிநிறுவன ஊழியர்களிடம் நீங்கள் நிதி நிறுவன ஊழியர்கள் தான் என்பதை நான் எப்படி உறுதி செய்வது எனக் கேட்டபோது அவரையும் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதில் உள்ள உண்மை சம்பவம் பற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக இன்ஸ்பெக்டர் சேரன் கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.