மாநகராட்சி தேர்தலில் உழைத்துக் களைத்த அதிகாரிகள் மற்றும் அலுவலர்களையும், கேரளாவுக்கு 3 நாள் இன்ப சுற்றுலா அனுப்பிய மதுரை திமுக கவுன்சிலர்கள்!
மதுரை மாநகராட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல், பரிசீலனை, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு, ஓட்டு எண்ணிக்கை எனகடந்த மாதம் அதிகாரிகளும், அலுவலர்களும் தொடர் பணிகளில் ஈடுபட்டனர். வேட்புமனு பரிசீலனையின்போது எதிர்க்கட்சி வேட்பாளர்கள் சிலரது வேட்பு மனுவை நிராகரித்ததால் ஏற்பட்ட நெருக்கடியை ஒருவழியாக சமாளித்தனர். இப்படி தேர்தல் நடக்கும் வரை பல்வேறு வகையிலும் மனஅழுத்தத்திற்கு ஆளாகினர்.
அதனால் மன அழுத்தம் நீங்கவும், புத்துணர்ச்சி பெறவும் ஒரு சுற்றுலா சென்றால் நன்றாக இருக்கும் என அவர்கள் திட்டமிட்ட போது ‘நாங்கள் இருக்கிறோம்’ என உதவிக்கு ஓடி வந்த தி.மு.க., கவுன்சிலர்கள் சிலர் தங்கள் சொந்த செலவில் கேரளா அனுப்பி வைத்துள்ளனர்.
கடந்த வாரம் வெள்ளி இரவு கேரளாவிற்கு இன்ப சுற்றுலா சென்றுவிட்டு ஞாயிறு இரவு மதுரை திரும்பினர். அந்த உற்சாகத்தில் நேற்று பதவியேற்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளையும் செய்தனர்.
அவர்களில் சிலர் கூறுகையில், ”யார் கவனிப்பிலும் நாங்கள் சுற்றுலா செல்லவில்லை. பணிச்சுமையால் ஏற்பட்ட மனஅழுத்தத்தை போக்க விடுமுறை எடுத்து சொந்த செலவில் சென்று வந்தோம்” என்றனர்.