கொரோனா வைரஸ் பரவலால் மாஸ்க் அணிவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமானப் பயணம் என எந்த பொது இடங்களிலும் செல்ல வேண்டும் என்றாலும் தற்போது அனைவரும் மாஸ்க் அணிந்து வருவதையே பார்க்க முடிகிறது.
இந்த சூழலில், மாஸ்க் அணியாமல் உள்ளாடை மூலம் முகத்தை மறைத்த விமானப் பயணி ஒருவருக்கும், விமான பணியாளருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விமான பயணி கீழே இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆதரவு தெரிவித்து சக பயணிகளும் கீழே இறங்கியிருக்கின்றனர். அமெரிக்காவில் நடந்தேறிய விவகாரம் அந்நாட்டில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் போர் லாடர்டேல் நகரிலிருந்து வாஷிங்டன் செல்லும் யுனைட்டட் விமானத்தில் ஆடம் ஜேன்(வயது 38) ஏறியுள்ளார். மாஸ்க் அணியாத ஜேன், சிவப்பு நிற உள்ளாடையை வைத்து முகத்தை மறைத்திருந்தார். அவரை கவனித்த விமான பணிப்பெண், ‘நீங்கள் மாஸ்க் அணியாவிட்டால் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்படுவீர்கள். உங்களை பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.
இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் ஆடம் ஜேன் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டார். அவருக்கு ஆதரவாக சில விமான பயணிகளும் கீழே இறங்கி வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடம் ஜேனுக்கு இது முதல் அனுபவம் கிடையாதாம். ஏற்கனவே, டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் இதேபோன்று நடந்து கொண்டதால் ஆடம் ஜேனை விமான நிறுவனம் கீழே இறக்கி விட்டுள்ளது.