ஆன்லைன் சூதாட்டம் முலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது .
ஆன்லைன் சூதாட்டம் முலம் கோடிக்கணக்கில் பணம் சுருட்டியவர் கைது .
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
அந்த புகார் மனுவில், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட நான் ரூ.87 லட்சம் பணத்தை பறிகொடுத்து விட்டேன்.
இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீராசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் என்பவர் இதுபோன்ற ஆன்லைன் சூதாட்டத்தை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.
அவர் மாமல்லபுரத்தில் விடுதி ஒன்றில் தலைமறைவாக பதுங்கி இருந்தார்.
அவரை சைபர் கிரைம் போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் முதல்கட்டமாக நடத்திய விசாரணையில், 30 பேரிடம் பணத்தை பிடுங்கியது தெரியவந்தது.
அவரிடம் இருந்து சுமார் 25 பவுன் தங்க நகைகள், ரூ.24.68 லட்சம் ரொக்கப்பணம் மற்றும் 6 கிலோ வெள்ளி பொருட்கள், 1 கார், 10 செல்போன்கள், ஐபேடு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவரது தந்தையும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர்.