புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி எவ்வித முன் அறிவிப்பும் இன்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது ஆசிரியைகளிடம் அவரவருக்கு உரிய கால அட்டவணைப்படி அவரவருக்கு உரிய வகுப்புகளில் சமூக இடைவெளியுடன் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர் இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அதிக அளவில் ஆசிரியர்கள் விடுப்பு எடுப்பதை தவிர்க்க அறிவுரைகள் வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் சரியாக முகக்கவசம் அணியாமல் இருப்பதை பார்த்து ஆசிரியர்கள் அனைவரும் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க அறிவுரைகள் வழங்கினார்.
பின்னர் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்ற உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வக அடிப்படை பயிற்சியினை பார்வையிட்டு அறிவுரைகள் வழங்கினார்.
ஆய்வின் போது பள்ளித்தலைமை ஆசிரியை சாந்தாதேவி உடன் இருந்தார்.
மேலும் மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளிக்கு வரும்போதும், பள்ளியில் இருக்கும்போதும், பள்ளியை விட்டு வீட்டிற்கு செல்லும்போதும், வீட்டில் இருக்கும்போதும் அரசின் அனைத்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடந்து கொரானா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என்று முதன்மைக்கல்வி அலுவலர் தெரிவித்தார்.